Monday, April 11, 2011

Japan Earthquake - ஜப்பான் நிலநடுக்கம்

ப்பான் ஆசியக் கண்டத்தில்  6,852 தீவுகளை கொண்ட வளர்ச்சியடைந்த நாடு.  இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது நிலநடுக்கம், சுனாமி தாக்கிய ஒன்சூதீவு                 (Honshu ) ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. உலக பரப்பளவின்படி ஏழாவது மிகப்பெரிய தீவு. இந்த தீவின் கடலில்தான் மார்ச் 11- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 3 மணிக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டார் ஸ்கேல் அளவில் 8.9. ஆக பதிவானது.  1900 ஆண்டிலிருந்து ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இது மிக பெரியது. இதனை அமெரிக்க ஜியாலிஜிகள் சர்வே  ரிக்டார் ஸ்கேலில் 9 என அளவிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கீழ் அமிழ்கிற எல்லை பகுதி (Subduction Zone)  வகையை சேர்ந்ததாகும். கீழ் அமிழ்கிற எல்லை பகுதி என்பது இரண்டு நில பலகைகள் மோதிக்கொள்ளும் போது, ஒரு நில பலகையின் மீது இன்னொரு நில பலகை மிதந்து செல்லலாம் அல்லது ஒரு நில பலகை மற்ற நில பலகையை கீழே அழுத்திவிடலாம். அப்படி அழுத்தப்படுகிற நில பலகை கருவ அடுக்கிற்குள் தள்ளப்பட்டு உருகிவிடுகிறது. இந்த வகையான நிலநடுக்கம்தான் ஜப்பானில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது பசிபிக் நில பலகை ஜப்பானின் நில பலகையின் மிது வேகமாக மோதி அதன் அடியில் சொறுகியது. இதனால் பெரிய அளவில் முறிவு பசிபிக்கடலில் ஏற்பட்டது.  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பசிபிக் நில பலகையானது வடமேற்கு திசையை நோக்கி ஒவ்வொரு வருடம்தோறும் 12 செ.மீ நகர்ந்து செல்கிறது. அதன்படி பார்த்தால் பசிபிக் நில பலகை முழுவதும் ஒவ்வொரு நூறு வருடத்திற்கும் 12 மீட்டர் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போதைய நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 

இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டின் வடக்கு ஒன்சூ தீவின் கிழக்கு கரையிலிருந்து 130 கி.மீ (81 மைல்) தொலைவில் பசிபிக் கடலில் 24.4 கி.மீ பூமியின் ஆழத்தில் ஏற்பட்டது. அதுதான் இந்த நிலநடுக்கத்தின் “"உலுக்குமையம்' (Epicenter).   இதனால் ஒன்சூ தீவில் உள்ள செண்டாய் நகரில் மிகப்பெரிய  நில அதிர்வுகள் ஐந்து நிமிடங்கள் ஏற்பட்டது.  இதில் 4 பெரிய முன்னதிர்ச்சியும் (Foreshocks) ஏற்பட்டது. பின்னர் நிலநடுக்கத்தின் அளவு குறைந்து 104 பின்னதிர்ச்சியும்  (Aftershocks) ஏற்பட்டன.  இந்த நிலநடுக்கத்தின் மூலம் ஒன்சூ 2.4 மீட்டர் நகர்ந்தது. நில பலகை அடுத்த நில பலகையின் அடியில் நகர்ந்ததால், கடல் தரைதளம் உருகுலைந்து மேல் நோக்கி தள்ளப்பட்டது. இதனால் உண்டான நிலநடுக்க அலையானது மிக மிக அதிக அளவிலான கடல் நீரை மேல் எழுப்ப தூண்டியது. இதனால்தான் கடலில் சுனாமி ஏற்பட்டது.

பொதுவாக நிலநடுக்கம் கடலில் நடந்தால் சுனாமி ஏற்படும். இது பெரிய நிலநடுக்கம் என்பதால் சுனாமி அலைகள் மிகப்பெரிய அளவில் 77அடி உயரம் எழுந்தன. இது 2004 -ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி போன்றதுதான். இந்த ஜப்பான் சுனாமி மணிக்கு 800 கி.மீ வேகத்தில் செண்டாய் கடற்கரையை நோக்கி சென்றது. உடனே பசிபிக் சுனாமி மையம் (Pacific Tsunami Centre) சுனாமி ஏற்படுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னரே செண்டாய் நகர மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தது. இருந்தும் பயனில்லை. பத்தே நிமிடத்தில் ராட்ஷச சுனாமி ஒன்சூ தீவு கடற்கரையை தாக்கியது. ஒன்சூ தீவின் 300 கி.மீ நீளத்திற்கும் சுனாமி அலை மோதியது. செண்டாய் நகரில் வேகமாக புகுந்த சுனாமி ஆக்ரோஷமாக அனைத்தையும் வாரி சுருட்டியது.  இந்த கட்டுரை எழுதும் வரை, இந்த கோரத்தாண்டவத்தில் சிக்கி 12,000 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேலானோர் காணாமல் போயினர். கிட்டதட்ட 3,50,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். விமான தளம், விமானங்கள், இரயில் தண்டவாளங்கள், வீடுகள், ஏராளமான கார்கள், கப்பல்கள் போன்றவை பெருமளவில் சேதமடைந்தன. பெட்ரோல் சுத்தகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்தது. 
மோசமான சேதத்தை ஜப்பான் சந்தித்திருந்தாலும், இந்த 8.9 அளவிலான நிலநடுக்கத்திலிருந்து பெரியளவில் தப்பிவிட்டதாகவே கருதலாம். சென்ற மாதத்தில் நியூசிலாந்து நாட்டில் கிறிஸ்ட்சர்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.5 ரிக்டார் ஸ்கேல் அளவுதான். ஆனால் பாதிப்பு ஜப்பானைவிட மிக அதிகமாகும். காரணம் நிலநடுக்கத்தின் உலுக்கு மையம்தான். ஜப்பானில் தற்சமயம் ஏற்பட்ட நிலநடுக்கம் கடற்கரையிலிருந்து 130 கி.மீ தூரத்தில் இருந்தது. இதனால் நிலநடுக்கமும் சுனாமியின் நேரடியான பாதிப்பும் குறைவு. பதிலாக, செண்டாய் நகரின் மிக அருகில் நிலநடுக்கத்தின் உலுக்கு மையம் அமைந்திருந்தால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும். ஆக நேரடியான பாதிப்பு எந்த அளவில் உள்ளதோ அதற்கு ஏற்ப அழிவும் மிக அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு 1923- இல் ஏற்பட்ட ஜப்பான் நிலநடுக்கத்தை கூறலாம். அது ரிக்டார் ஸ்கேலில் 7.9 தான். ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரை சுற்றி பேரழிவு ஏற்பட்டது. இதற்கு காரணம் அந்த நிலநடுக்கத்தின் உலுக்கு மையம் டோக்கியோவில் அமைந்திருந்தது. அதனால் தற்போதைய நிலநடுக்கம் கரையிலிருந்து விலகி ஆழ்கடலில் ஏற்பட்டது ஒரு ஆறுதலாகும்.
இதே கருத்தைதான் பிரிட்டீஷ் ஜியாலஜிக்கல் சர்வேயில்  பணிபுரியும் நிலநடுக்க ஆய்வாளர் (Seismologist) அஸ் வாக்கர், “ ""சுனாமியை பொருத்த வரை அதிகமாக பயப்பட தேவையில்லை. கடற்கரையையொட்டியுள்ள நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் அதிர்வுகள் பலமுறை ஏற்படுகிறது. இந்த அதிர்வுகள் ஒவ்வொரு முறையும் நம்மை எச்சரிக்கை செய்கிறது. நிலநடுக்கத்தின் அலையானது ஒரு வினாடிக்கு மூன்று மைல் பயனிக்கும். ஆனால் சுனாமி ஒரு மணி நேரத்தில் 500 மைல் பயணிக்கும். அதனால் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே சுனாமியை எதிர்கொள்ள தயாராகிவிடலாம். இதனால் அழிவு குறைவாக இருக்கும். ஜப்பானிலிருந்து சுனாமி அலைகள் கிளம்பினால் 15 மணி நேரத்தில் சிலியை வந்தடையும். இந்த கால அவகாசத்தில் மக்களை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம். அதுபோலதான் தற்போதும் நடந்தது. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே பசிபிக் சுனாமி ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை உடனே அனுப்பியது. அதனால்தான் கடற்கரை பகுதிகளை கொண்ட சிலி, பெரு, அமெரிக்கா ஆகிய நாடுகள் சுனாமி எச்சரிக்கையை பரப்ப முடிந்தது.'' என்றார்.
இது போன்ற நிலநடுக்கம், சுனாமியிலிருந்து தப்பிப்பது மக்களின் விழிப்புணர்வு சார்ந்தே உள்ளது. அந்த வகையில் ஜப்பானியர்களும் சீனர்களும் விழிப்புணர்வு அதிகம் கொண்டவர்கள். ஏனெனில் அந்த நாடுகள் பல நூற்றாண்டுகளாக இத்தகைய இயற்கை சீற்றங்களை சந்தித்தே வந்துள்ளன.  இந்தகைய பேரிடர்களை சந்திக்கும் எவருக்கும் எச்சரிக்கை உணர்வு அவசியம்.  இதை பற்றி ஜெர்மனி நாட்டின் நில நடுக்க ஆய்வாளரும் ஹெலம்ஹோல்ட்ஸ் ரிசர்ச் சென்டர் பார் ஜியோ- சயின்ஸ்  (Helmholtz Research Centre for Geo#sciences) டைரக்டருமான டியாட்சிவெல்லி  கூறும்போது, “ ""தற்போதைய ஜியாலஜிகள் ஆய்வுபடி நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சுனாமி ஏற்பட போவதை கண்டுபிடித்து விடலாம். பூமி நில அடுக்கை புரிந்துக்கொண்டால், அதற்கேற்ப கணிப்புகளை உருவாக்கலாம். ஜீயாலஜிஸ்ட்கள் உலகம் முழுவதும் கடந்த நூறு வருடங்களாக முயன்று வருகின்றனர். பயனேதுமில்லை. ஆனால் புவியின் மாற்றங்களை முழுமையாக புரிந்து கொள்வதன் மூலமும் முன்னெச்சரிக்கை மையங்களை அமைப்பதனாலும் இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்'' “என்றார்.

சுனாமியும் அணுக்கரு உலை வெடிப்பும்

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷீமா அணுக்கரு உலைகள் வெடித்தன. இது உலகின் மூன்றாவது அணு விபத்தாகும். இதற்கு  முன் 1979 -ஆம் ஆண்டில் த்ரி மைல் தீவிலும் (Three mile Island), 1986-இல் உக்ரைன் நாட்டிலுள்ள செர்னோபில் அணுஉலை விபத்தும் நடந்துள்ளன. நில  நடுக்கத்தைவிடவும் சுனாமியை விடவும் மிக பயங்கரமானது அணுக்கரு உலை வெடிப்பு. சமீபத்தில் ஜப்பானில் அணுக்கரு உலை வெடித்ததை பற்றி  பார்க்கும் முன்னர் அணு உலையை பற்றி மேலோட்டமாக பார்ப்போம்.

அணு என்பது ஒரு தனிமத்தின் மிக நுண்ணிய பிரிவு. உயிரினங்களுக்கு செல் எப்படியோ அதுபோல தனிமங்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை.  இந்த அணுவினுள் மூன்று வகையான அணுக்கூறுகள் உள்ளன. அவை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான். எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி வலம்  வந்து கொண்டிருக்கும் எதிர் மின்சுமை கொண்ட துகள். புரோட்டான் உட்கருவினுள் அமைந்திருக்கும் நேர்மின்சுமை கொண்ட துகள். நியுட்ரான் மின்சுமை அற்று உட்கருவினுள் உள்ள துகள். அணுவில் எலக்ட்ரானும் புரோட்டானும் சம அளவில் இருக்கிறது. இதன் சக்திகள் ஒன்றையொன்று  கவர்வதால் அணுவின் அமைப்பு நிலையானதாக உள்ளது. இந்த அணுவை உடைப்பதால் அதன் ஆற்றல் வெளிபடும்.

அதுபோலவே தனிமங்களில் சிலது கதிரியக்க தனிமங்களாகும். அந்த குறிப்பிட்ட கதிரியக்க தனிமங்களின் அணுவை பிளக்கும்போது  கதிரியக்கம் வெளிபடும். இதை 1939 -இல் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோஹானும் எப்.ஸ்ட்ராஸ்மானும் நிரூபனம் செய்தனர். அவர்கள் யுரேனியம்  தனிமத்தை நியூட்ரான் கொண்டு தாக்கினர். அது பேரியம், கிரிப்டான் என்ற இரண்டு சமமான துண்டுகளாக வெடித்து வெளிவந்ததுடன் பேரளவு  ஆற்றலும் வெளிபட்டதை கண்டுபிடித்தனர். அது முதல்தான் அணுவை பிளந்தால் ஆற்றல் வெளிப்படும் என்பது அறியப்பட்டது.  ஆக கனமான  அணுக்கருவை பிளந்தால், இரு துண்டுகளாக உடைவதுடன் மிக அதிகமான ஆற்றலும்  நியூட்ரான்களும் வெளிப்படும். இந்த நிகழ்வு அணுக்கரு பிளவு   (Nuclear Fission)  எனப்படுகிறது.

அணுக்கரு பிளவின் போது, எப்படி ஆற்றலும் எலக்ட்ரான்களும் வெளிபடுகின்றது என்பதை உலக புகழ்பெற்ற விஞ்ஞானி  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிரூபித்து காட்டினார். ’’அணுக்கரு பிளவின்போது அளவற்ற ஆற்றல் வெளிபடுகிறது. பிளவுக்கு முன் உள்ள அணுக்கருவின் நிறை  பிளவுக்கு பின் கிடைக்கும் வினைவிளை பொருட்களின் கூடுதல் நிறையைவிட அதிகம். இந்த நிறை வேறுபாடு E = mc நிறை ஆற்றல் சமன்பாட்டின்படி  ஆற்றலாக தோன்றும், என்று தனது அணு கோட்பாட்டை நிரூபித்தார். அதேசமயம் அணுவில் ஏற்படும் அணுக்கரு பிளவு நிகழ்வு மற்றோர் அணுவில்  பிளவை தூண்டுகிறது. அப்போது வெளிப்படும் நியூட்ரான்கள் மீண்டும் அடுத்துள்ள அணுக்களில் அதே உட்கருப் பிளவை தூண்டுகிறது. இந்நிகழ்வு  அடுத்தடுத்த உட்கருக்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டே இருக்கும். இப்படி அடுத்தடுத்து உருவாகும் அணுக்கரு பிளவில் நியூட்ரான்களின்  எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் மிகக் குறைந்த கால இடைவெளியிலேயே கட்டுக்கு மீறிய வெடிப்பு ஏற்பட்டு அளவற்ற ஆற்றல் வெளிப்படும்.  இதுவே அணுகுண்டு வெடிப்பதின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.


அணுகுண்டு என்பது கட்டுப்பாடற்ற தொடர்வினையை அடிப்படையாக கொண்டது.  இதனால்தான் அணுகுண்டு வெடித்துச் சிதறும்போது ஏராளமான ஆற்றல், வெப்பம், ஒளி, கதிர்வீச்சு ஆகியவை வெளிப்படுகின்றது. இந்த நிகழ்வை அணுக்கரு உலையில் முழுமையான கட்டுபாட்டுடன் கூடிய அணுக்கரு பிளவு தொடர்வினையாக நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலமாகதான் அணுக்கரு உலைகள்  மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அணுக்கரு பிளவில் அதிக அளவு ஆற்றல் வெளிப்படுவதால் அணுக்கரு ஆற்றல் மின்சாரம் உற்பத்தி  செய்யப் பயன்படுகிறது.

அணுக்கரு உலைகளை அவை பயன்படுத்தப்படும் தேவைகளைப் பொருத்து, ஆராய்ச்சி உலைகள், உற்பத்தி உலைகள் மற்றும் திறன் உலைகள் என  வகைப்படுத்தலாம். ஆராய்ச்சி உலைகள் முக்கியமாக ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் நியூட்ரான்களையும், கதிரியக்க ஐசோடோப்புகளையும் உருவாக்கப்  பயன்படுகின்றன. உற்பத்தி உலைகள் பிளவைக்கு உட்படாத அதிகமாகக் கிடைக்கும் பொருள்களை பிளவைக்கு உட்படும் பொருள்களாக  மாற்றுகின்றன. திறன் உலைகள் அணுக்கருப் பிளவையினால் உருவாகும் ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன. பயன்படுத்தப்படும் தணிப்பான்  மற்றும் குளிர்விப்பான் இவற்றின் அடிப்படையில் திறன் உலைகளை மேலும் கொதிநீர் அணுக்கரு உலை, உயர் அழுத்த நீர் அணுக்கரு உலை, உயர்  அழுத்த கனநீர் அணுக்கரு உலை மற்றும் வேக அணுக்கரு ஈனுலை (உற்பத்தி) என வகைப்படுத்தலாம். உலகம் முழுவதிலும் வெவ்வேறு  காரணங்களுக்காக வெவ்வேறு அமைப்புகளில் அணுக்கரு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் செறிவூட்டப்பட்டு, 92U235 அணுக்கரு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த யுரேனியத்தை  பிளவுபடுத்துவதன் மூலம் வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது. அதனால் நீர் கொதித்து நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியினை டர்பன்கள் வழியாக  ஜெனரேட்டர்கள் சுழலவைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த அணுக்கரு உலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிறு உருளைகளாக (Pellets) இருக்கும். இவை சிர்கோனியம் என்ற (Zirconium) உலோகக்கலவையால் ஆன மெல்லிய குழாய்களில் அடைக்கப்படுகின்றன. இது பிளவைக்கு உட்படும் தண்டு  ஆகும். இவை போன்ற 19 தண்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு எரிபொருள் கற்றை (Fuel rods)  உருவாக்கப்படுகிறது. கேலண்ட்ரியா (Calandria)  என்ற அணுக்கரு கலத்தினுள்  300 குழாய்கள் உள்ளன. இக்குழாய்களினுள் எரிபொருள் கற்றைகள் வைக்கப்படுகின்றன. எரிபொருள் தண்டுகளைக் கொண்ட அணுக்கரு உலையின்  பகுதி அணுக்கரு உலை மையம் (Reactor core) எனப்படும். இதில் நடக்கும் தொடர்வினையைக் கட்டுப்படுத்த, கட்டுப்படுத்தும் தண்டுகள் (Control Rods) பயன்படுகின்றன. இவை  நியூட்ரான்களை அதிக அளவில் உட்கவரக் கூடியவை. பொதுவாக போரான் அல்லது காட்மியம் போன்ற தனிமங்களாலான கட்டுப்படுத்தும் தண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.


கட்டுப்படுத்தும் தண்டுகள் எரிபொருள் கற்றைகள் மற்றும் தணிப்பானுக்கு இடைப்பட்ட இடைவெளிகளின் வழியே  செல்லுமாறு அணுக்கரு உலையின் மையத்தில் செருகப்பட்டுள்ளன. இவற்றை உள்நோக்கி தள்ளியோ அல்லது வெளியே இழுத்தோ வினை வீதத்தைக்  கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்தும் தண்டுகளை உள்நோக்கி தள்ளினால் யுரேனியம் மிக குறைவான வெப்பத்தை வெளியிடும். கட்டுப்படுத்தும்  தண்டுகளை வெளியே இழுத்தால் அதிகளவிலான வெப்பம் உற்பத்தியாகும்.  ஒரு 100 வாட்ஸ் பல்ப் வெப்பத்தை நாம் உணர்கிறோம். அதேபோல  தோராயமாக 1,000,000,000, வாட்ஸ் பல்ப் எரிந்தால் எவ்வளவு வெப்பம் கிடைக்குமோ அதுதான் அணுக்கரு உலையில் கிடைக்கிறது.

இப்படிபட்ட அணுக்கரு உலைதான் அண்மையில் ஜப்பானில் நிலநடுக்கத்திலும் சுனாமியிலும் மாட்டிக்கொண்டது 40 வயதாகும் ஃபுகுஷீமா அணுக்கரு  உலை.  இந்த அணுக்கரு உலை ஒரு கொதிநீர் உலையாகும்  (BWR-Boiling Water reactor). மார்ச் 11-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டதும், அணுக்கரு உலைகள் தானே நின்றுவிட்டன.  அதாவது அணுக்கரு உலை மையத்தினுள் உள்ள கட்டுப்படுத்தும் தண்டுகள் முழுமையாக உள்நோக்கி தள்ளி மின்சார உற்பத்தியை நிறுத்திவிட்டது.  இது ஏற்கனவே தன்னிசையாக செயல்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்போது குளிர்விப்பான் (Coolant) தேவை (அணுக்கரு உலையினுள் உருவாகும்  வெப்பத்தை நீக்க குளிர்விக்கும் அமைப்பு பயன்படுகிறது. சாதாரண நீர், கனநீர், திரவ சோடியம் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்படும்  குளிர்விப்பானாகும்). நிலநடுக்கத்திற்கு முன் அணு உலை மின்சாரம் உற்பத்தி செய்தது. அதனால் குளிர்விப்பன்கள் இயங்கின. இப்போது மின்சாரம்  உற்பத்தி நின்றதும், குளிர்விப்பான்கள் இயங்கவில்லை. அதனால் அணுக்கரு உலையின் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் தற்காலிக  மின்சாரத் தேவைக்காக டீசல் ஜெனரேட்டர்கள் இருந்தன. அவற்றை உடனடியாக இயக்க முயற்சித்தனர். அந்த சமயத்தில் சுனாமி வந்து தாக்கியது.  எதிர்பாராத விதமாக சுனாமி மிகப்பெரிய அளவில் வந்ததால், டீசல் ஜெனரேட்டர்களில் கடல்நீர் புகுந்தது. இதனால் ஜெனரேட்டர்கள் செயலிழந்தன.  குளிர்விப்பான்களையும் இயக்க முடியவில்லை. ஆகையால் அணுக்கரு உலையின் வெப்பம் தணியவில்லை. இதற்கிடையே யுரேனிய கலத்தில் வெப்பம்  அதிகரித்து வெடிப்பு ஏற்பட்டு, இந்த வெடிப்பின் வழியே கடல்நீர் புகுந்தது. எரிபொருள் உருகுலைந்தது. உலை 1- இல் 70 % எரிபொருளும், உலை 2 - இல் 33 % எரிபொருளும் உருகுழைந்தன. உலை 3- இல் பாதுகாப்பு கான்கிரீட் கட்டிடம் உடைந்தது. உலை 4 வெடித்து பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.  இதனால் எரிப்பொருள் கலத்தில் நீர் நிரம்பி ஹைட்ரஜன் வாயு உருவாகியது. இந்த நிகழ்வு ற்ட்ங்ழ்ம்ர்ப்ஹ்ள்ண்ள் எனப்படும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஹைட்ரஜன் வெடிக்கும் பண்புக் கொண்ட ஒரு வாயு. இதனால் ஏற்பட்ட ஹைட்ரஜன் வாயுவின் அழுத்தம்  உலையின் கட்டிடத்தை வெடிக்க வைத்தது.  இதனை தொடர்ந்து சங்கலித் தொடர்போல் அடுத்தடுத்த உலைகள் வெடித்தன. அதனால் கதிரியக்கம்  வெளியானது. காற்று மண்டலத்தில் கதிரியக்க அளவு அதிகரித்தது. சீசியம் ஐசோடோப்பு  காற்றில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுப்போன்றதொரு நிகழ்வுதான் 1937- இல் ஹிண்டென்பர்க் விபத்தில் ஏற்பட்டது. ஆனாலும் இது ஹைட்ரஜன் வெடிப்புத்தானே தவிர அணுகுண்டு  வெடிப்பு அல்ல. இந்த வெடிப்பால் கான்கிரீட் கட்டிடம், இரும்பு கட்டிடம், போன்றவை சேதமானது. வெளியேறும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்தவும்  வெப்பத்தை குறைக்கவும் இருந்த ஒரேவழி அதே கடல்நீர்தான். அந்த கடல்நீரைத்தான் அணுக்கரு உலைகளின் மீது பீய்ச்சி அடித்தனர். ஏனெனில்  கடல்நீரில் போரான் கலந்துள்ளது. இந்த போரான் கதிரியக்கத்திலிருந்து வெளிப்படும் நியூட்ரான்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதோடு சிறந்த  திரவ சோடியம் குளோரைடான கடல்நீர் சிறந்த குளிர்விப்பானும் கூட. 

இந்த அணுக்கரு உலை வெடிப்பின் மூலம் வெளியேறும் கதிரியக்கத்தை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய சுகாதார ஆபத்தை ஜப்பானியர்கள் சந்திக்க வேண்டிவரும். கதிரியக்க ஐயோடின் மிகவும் ஆபத்தானது. 1986- இல் செர்னாபில் அணு விபத்தின் போது இது பரவி தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்தியது. இதனை ஐயோடின் மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம்  கட்டுப்படுத்தலாம். சீசியம் கதிரியக்கத்தால் தோல் புற்று நோயும், புளுட்டோனியம் கதிர்வீச்சால் எலும்பு மற்றும் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். தற்போது  ஜப்பான் சென்றுள்ள உலக அணு விஞ்ஞானிகள் குழு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Source: Nakheeran
   

Wednesday, March 9, 2011

அயோத்தியின் வரலாறு- ayodhya temple

யோத்தி இந்து, முஸ்லீம் ஆகிய இரு பிரிவு மக்களுக்கும் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து மக்கள் ராமர் பிறந்த பூமியாக  கருதுகின்றனர்.  முஸ்லீம்களுக்கு  அயோத்தியில் சராயு ஆற்றின் கரையில் ஷியா, "ஆதாமின் பேரன்' புதைக்கப்பட்ட இடு காடாகும். அயோத்தி ராமர் இந்து காலண்டு படி  தீர்த்த யுகத்தில்  9,00,000 வருடங்களுக்கு முன் பிறந்ததாக  நம்பப்படுகிறது. புராதன வரலாறுப்படி அயோத்தி கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. மேலும் கி.மு. ஆறாவது மற்றும்  ஐந்தாவது நூற்றாண்டுகளில் எழுச்சி யுற்ற புத்த மதத்தினால் அதன் தலை நகரத்துடன் இணைந்ததாகவும், அங்கே புத்தர் சில காலம்  தங்கியதாகவும் கூறப்படுகிறது. அன்றைய சாக்தான் என்றழைக்கப்பட்ட பகுதிதான் இன்றைய அயோத்தி என அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அயோத்தி  விக்கிரமாதித்தனால் புனரமைக்கப் பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் புத்த மதம் பிராமண ஆதிக்கத்தால் மறைய  தொடங்கியது. பேராசிரியர் ரொமிலா தாபர்,  ""இரண்டாம் சந்திரகுப்தர் தான் விக்கிரமாதித்தன் என்ற பட்டப்பெயரை கொண்டவர்'' என கூறுகிறார். பேராசிரியர் ஷேர் சிங், ""ஸ்கந்தகுப்தா தனது தலைநகரை சாக்தா (அயோத்தி)  மாற்றியதற்கான ஆதாரமில்லை'' என்று கூறுகிறார்.

அயோத்தி இந்துக்களின் ஏழு புனித தலங் களில் ஓன்றாக விளங்குவதற்கான காரணம் அது ராமர்  பிறந்த இடமாக சொல்லப்பட்டது. அயோத்தியாவில் உள்ள 6,000 இந்து கோயில் களில் 4,000 கோயில்கள் ராமர் தொடர்புடைய தாகும். இதனால் இந்து  அமைப்புகள் அயோத்தி இந்துக்களின் தலைநகரம் என்றும், ராமர் தேசிய கடவுள் என்றும் கூறி வருகின்றனர். அயோத்தி இல்லை என்றால் நாடே இல்லை என்றும், எப்படி கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் புனித பூமியோ அதுபோல இந்துக்களுக்கு அயோத்தி புனித பூமி  என்பது அவர்கள் வாதம்.

அடுத்த பிரச்சினையானது அயோத்தியின் இருப்பிடம் பற்றியது. அயோத்தி  பைசாபாத் மாவட்டத்தில் சராயு நதிக்கரைக்கு வலது புறத்தில் தொல்லிலியல் அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அயோத்தியில்   மனித வாழ்க்கை யானது வடக்கு பள்ளப்பான கருப்பு மண் பானை நாகரிகத்தை   (Northern Black Polished ware-NBPW) தாண்டி போகவில்லை என காட்டியது. இது கி.மு 700-ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். இராமாயணம் உண்மையாகவே நடந்திருந்தால் அதற்கான வரலாற்றுஆதாரங்கள் கிடைத்திருக்கும்.(பி.பி.லால்-ராமாயணா இடங்களின் அகழ்வாராய்ச்சி அறிக்கை-1992)  அதேபோல வால்மீகியின் ராமாயணமும் சில நூல்களையும் பேராசிரியர் ஷேர்சிங் ஒப்பிட்டு கூறுகையில், ""வால்மீகியின் கூற்றுப்படி  அயோத்தியா சரி என்றால், அது நேபாளத்தில் பாயும் சராயு ஆற்றின் தெற்கே 22 கிலோமீட்டர் உள்ள இடமாகும். ( பி.எஸ். ஸ்ரீதர மூர்த்தியின் நூல்- ராமா, இராமாயணா மற்றும் பாபர். 1988- ஆம் ஆண்டு வெளியீடு)

முஸ்லீம் வெற்றிக்கு பின்னர் அயோத்தி பிரச்சினை முக்கியக் கட்டத்திற்கு வந்தது. மன்னர் பாபரின் தளபதியான மீர்பாக்ஷி 1528-ம் ஆண்டில் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு,  அந்த இடத்தில் பாபர் மசூதியை கட்டினார் என கூறப்படுகிறது. இப்போது இதுதான் பிரச்சினை. அயோத்தியில் 1975-ம் ஆண்டு முதல் ஆய்வு செய்த  தொல்பொருள் நிபுணர் பி.பி. லால் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இதை மறுத்துள்ளது. மேலும் அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க வில்லை என்று தெரிவித்தது. ராஷ்டீரிய சேவா சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பு நடத்தும் மானதன்  (Manthan)  பத்திரிக்கையில் 1990 -ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழில் இராமர் கோயிலின் தூண்கள் தென்பட்டதாக செய்தி வெளியிட்டது.

18-ஆம் நூற்றாண்டில் நவாப்கள், அவாத், ஷீஜா-உத்-தௌலத் மற்றும் ஆசப்-உத்-தௌலத் ஆதரவினால் அயோத்தி மீண்டும் இந்துக்களின் புனிததலமாக விளங்கியது. பின்னர் இந்து பக்தி இயக்கம் அவந்தி நோக்கி திரும்பியதனால் ஆங்கிலேய அரசு அயோத்தியை தங்களுக் காக எடுத்துக்கொண்டது. இந்த சமயத்தில் நிர்மோஸ் என்ற இந்து துறவி இது இராமர் பிறந்த இடமென பாபர் மசூதி உள்ள இடத்தை உரிமைக்கோரினார். மேலும் ராமர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதி கட்டப் பட்டுள்ளதாகவும் கூறினார். அப்போதுதான் அயோத்தி பிரச்சினை உருவானது. இது 1853-55-இல் மிகப்பெரிய கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. (வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா, மசூதிப் பிரச்சினை: ஒரு வரலாற்று விசாரணை என்ற நூல்.). 1883-ம் ஆண்டு மே மாதம் பைசாபாத் கமிஷனர் இந்துக்கள் சாபூத்ரா (நடைபாதை) வலது பக்கத்தில் கோயில் அமைக்க முயன்றபோது முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு அனுமதி மறுத்தார். 1885-ல் மசுந்ந் ரகுபார் தாஸ் பைசாபாத் சப்கோர்ட்டில் கோயில் கட்ட அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கோயில் கட்ட 1886 -இல் அனுமதித்ததுடன், அதற்கு எதிரான மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதனால் பதட்டம் நிலவியது. முஸ்லீம் போராட்டக் காரர்கள் பாபர் மசூதி முன் கூடினார்கள். இந்துக்களும் அருகிலுள்ள அனுமர் சிலை முன்பு கூடினார்கள். இரு தரப்புக்கும் இடையே மூண்ட கலவரத்தில் 75 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இந்துக்கள் பாபர் மசூதியை கைப்பற்றினார்கள்.

19-ம் நூற்றாண்டில்தான் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பரப்பப்பட்ட செய்தி ஆவணங்களில் பதிவானது. 1822-ல் பைசாபாத் நீதிமன்ற அலுவலர் ஹபிஜுல்லா என்பவர்  பாபரால் கட்டப்பட்ட மசூதி ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்பின்பு இந்த கதையானது, பி.கார்னேகி என்பவரால் பைசாபாத் வரலாற்று ஆவணத்தை 1870- இல் தயாரித்து அலுவலக ஆவணமாக மாற்றப்பட்டது. இது குறித்து பைசாபாத் மாவட்ட ஆவணத்தில் பாபரின் நினைவுகள் என்ற நூலை இதற்காக மொழி பெயர்த்திருப்பது பதிவாகியுள்ளது. ஆங்கிலேய அரசு தனது கோப்பில் "ஜன்மஸ்தன் மசூதி அஜிதியா' என்று எழுதி அதை பதற்றம்  நிறைந்த கோயிலிலின் முன்பாக வைத்தது. 1920-30-ஆம் ஆண்டுகளில் மசூதி முஸ்லீம்களிடம் இருந்த போது அவர்கள் அதை தூக்கி எறிந்தனர். இதனை பைசாபாத் கமிஷனர் 1938- ஆம் ஆண்டு செப்டம்பர் 16- ம் நாள்  கண்டித்தார்.

1949-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி இரவு மசூதியின் உள்ளே சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் அப்போதைய நிர்வாகம்  இருதரப்பி னருக்கும் கலவரம் ஏற்படாமலிலிருக்க மசூதியை மூடியது. அதையடுத்து முதன் முதலாக இப் பிரச்சினைக்காக  முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  அதில் அபதி ராம்தாஸ், சுதர்சன் தாஸ், ராம் சுக்லா தாஸ் ஆகிய மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை அயோத்தி காவல் நிலையத்தில் பதிவுவானது. இவர் களுடன் மேலும்  50-லிருந்து 60 பேர் வரை கையில் சிலைகளுடன் மசூதியில் நுழைய முயன்றதை அப்போது பணியில் இருந்த அதிகாரிகளும்,  பொதுமக்களும் பார்த்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு சிறிது காலத்திற்கு பிறகு 5,000- 6,000 மக்கள் கீர்த்தனைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியவாறு மசூதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால்  அவர்கள் தடுத்து  நிறுத்தப்பட்டனர்.



அனைத்திந்திய இந்து மகாசபா மற்றும் பாரதீய ஜனசங்கம் அயோத்தி, மதுரா மற்றும் காசிக்கு ரதயாத்திரை நடத்தியது. 1983-ம் ஆண்டு முழுவதும் விஷ்வ இந்து பரிஷத் பல முக்கிய தலைவர்களுடன் ரதயாத்திரை நடத்தி பல நதிகளின் புனிதநீரை சேகரித்தது  பிரச்சினையை அதிகரிக்க தொடங்கியது''.

1984-ம் ஆண்டு அக்டோபர் வி.ஹெச்.பி          தனது ஸ்ரீ ராம ஜென்ம பூமி முக்தி யாஜ்னா சமிதி மூலம் இதனை தேசிய அளவில் பிரச்சினை ஆக்க முயன்றது. இந்த சமிதி 1984-ஆம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி உருவாக்கப் பட்டது. 1984-ம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி  அயோத்தியிலிலிருந்து மாநில தலைநகர் லக்னோவிற்கு 130 கிலோமீட்டர் பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை அக்டோபர் 14-ஆம்  தேதி லக்னோ வந்தடைந்தது. அங்கு நடைப்பெற்ற பொதுகூட்டத்தில் முதலமைச் சரிடம் இந்துக்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட  வேண்டும் என வலிலியுறுத்தப் பட்டது. அதற்கு அடுத்த நாளே ஸ்ரீ ராம ரத யாத்திரை உத்திர பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும்  நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை அக்டோபர் 31-ஆம் தேதி டெல்லி வந்தடைந்தது.  அங்கு நவம்பர் 2-இல் நடை பெறும் இந்துக்கள்  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதால்  இந்நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது.

1985-இல்  பைசாபாத் மாவட்ட நீதிபதி மசூதியின் பூட்டை  திறக்க உத்தரவிட்டு சாமியார்கள் உள்ளே செல்ல அனுமதித்தார். இந்த உத்தரவின் காரணமாக 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மசூதியின் பூட்டு திறக்கப் பட்டது. அப்போதைய ராஜீவ் காந்தி அரசு தேர்தலிலில் மக்களின் வாக்குகளை பெற இவ்வாறாக நடந்துக் கொண்டது. இதனால் நாடு முழுவதும் முஸ்லீம் மக்களிடையே ஒருவித பதட்டம் எழுந்தது., வி.ஹெச்.பி தொண்டர்கள் பேரணிகளை நடத்தினார்கள். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த  ராஜேந்திரகுமாரி பாஜ்பாய் ""முஸ்லீம்கள் நீதி மன்ற ஆணையை மதித்து அமைதிகாக்க வேண்டும்'' என்றார்.

சங்க் பரிவார் அமைப்பின் இயக்கம் நாடு முழுவதும் தேசிய சிந்தனை மாநாடுகளை நடத்தியது. பெரும் இக்கட்டான சூழ்நிலை 1989 தேர்தல்களின் போது ஏற்பட்டது. அப் போது மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட நாடு முழுவதிலிலிருந்து செங்கற்கள் கொண்டு  வரப்பட்டன. இதை பற்றி என். ராம் கூறுகையில் ""1989 பொது தேர்தலுக்கு முன்பாக ராஜீவ் காந்தி அரசு வி.ஹெச்.பி அமைப்பினை அடிக்கல் நாட்ட அனுமதித்தது. இது வி.ஹெச்.பி பிஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களை உற்சாகப்படுத்தியது'' என்றார். 1989-ஆம் ஆண்டு நவம்பர் 22-24 பொது தேர்தல்கள் மோசமான வன்முறை களமாக இந்திய வரலாற்றில் அமைந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். பாரதீய ஜனதா  கட்சியின் ஆதரவோடு 88 தொகுதிகளை கைப்பற்றி வி.பி.சிங் பிரதமரானார். அவர் பதவி ஏற்றவுடன் இந்த மோதல் குறித்து விவாதிக்க அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு குழுவை ஜனவரி 8, 1990-ஆம் ஆண்டு அமைத்தார். நீதி மன்றம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது.

1990-ஆம் ஜனவரி 12-இல் சுப்ரீம் கோர்ட்டு இந்து அமைப்பை சேர்ந்தவர்களிடம் விளக்கம் அளிக்குமாறு கோரியது. அப்போது "அனைத் திந்திய  பாபர் மஸ்ஜித் நடவடிக்கை குழு' சம்பவம் குறித்து விசாரிக்க தென் மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும், ஆனால்  அவர்கள் இந்துவாகவோ, முஸ்லீ மாகவோ இருக்ககூடாது என்று கூறியது. பிறகு முஸ்லீம் தலைவர்கள் வி.பி. சிங்கை சந்தித்து இது இடத்திற்கான பிரச்சினை அல்ல, வரலாற்று பிரச்சினை என்றும் இதில் கோர்ட்டு முடிவு செய்ய தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும்  கூறினர். 1990-ஆம் ஆண்டு ஜனவரி 27-28-இல் தர்மாச்சாரியா சாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் அலகாபாத்தில் கூடி, அதில்  பிப்ரவரி 14-ஆம் தேதி கோயில் கட்டலாம் என்று முடிவு செய்தன. வி.பி. சிங் மிகுந்த சிரமங்களுக்கு இடையே காஷ்மீர் மற்றும் பஞ்சாப் நிலையை எடுத்து கூறி கட்டுமான பணியை தள்ளி வைத்தார். அதற்கு பிறகு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவான பதிலும்  வராததால் ஹரித்துவாரில் கூடிய வி.ஹெச்.பி கட்டுமான பணியை அக்டோபர் 30-இல் தொடங்குவது என்று முடிவு செய்தது.

வி.பி.சிங் பாராளுமன்றத்தில் மண்டல் கமிஷன் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு மேல் ஜாதி இந்துக்கள், பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் எல்.கே. அத்வானி அயோத்தியில் கோயில் கட்ட அனுமதிக்க கோரியும் இந்துத்துவாவிடம் அதை  ஒப்படைக்க கோரியும் 10,000 கி.மீட்டர் ரதயாத்திரையை தொடங்கினார். அத்வானியும் அவருடன் யாத்திரை மேற்கொண்டவர்களும்  அக்டோபர் 23-ஆம் தேதி பீகாரில் கைது செய்யப்பட்டனர். இதனால் பாரதீய ஜனதா கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் அரசு நவம்பர் 9-ஆம் தேதி பதவி விலகியது.

நவம்பர் 1990 முதல் மார்ச் 1991 வரை பிரதம ராக இருந்த சந்திரசேகர் வி.ஹெச்.பியையும் முஸ்லீம் அமைப்பையும் பேச்சுவார்த்தையில்  ஈடுபட செய்தார். இந்த இரு அமைப்புகளும் முதல்முறையாக டிசம்பர் 1, 1990-ஆம் தேதி சந்தித்தன. இந்த இரு அமைப்புகளும் தங்களிடம்  இருந்து ஆதாரங்களை டிசம்பர் 23-ஆம் தேதி  அரசாங்கத்திடம் அளித்தன.  பின்பு மீண்டும் ஜனவரி 10, 1991-இல் மீண்டும் சந்தித்தன. அப்போது அவை இரு அமைப்புகளில் இருந்து நான்கு குழுக்களை அமைக்க ஒப்புதல் அளித்தன. இதன் மூலம் வரலாற்று ஆய்வு நடத்தி  அறிக்கை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் பிரதமரான நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்து அமைப்புகள் மசூதியை இடிப்போம் என்று  அறிவித்தன. இருந்தபோதிலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்கினார் நரசிம்மராவ்.

1992, டிசம்பர் 6 பி.வி. நரசிம்மராவ் அயோத்தி பற்றி பாராளுமன்றத்தில் பேச இயலாமல் போன நேரத்தில் 70,000 சேவா தொண்டர்கள் ராம சதா காஞ்ச்  பகுதியில் பொதுக் கூட்டத்திற்காக கூடினார்கள். மேலும் 500 சாதுக்களும், சாமியார்களும் அடிக்கல் நாட்டு பூஜைக்கு தயாரானார்கள். காலை  11.50 மணிக்குள் ஏறத்தாழ 1500 கர சேவர்கள் தடுப்பை தகர்த்து உள்ளே நுழைந்து போலீசார் மீது கற்களை வீசினார்கள். 1,000 கரசேவா தொண்டர்கள் பாபர் மசூதி உள்ளே நுழைந்த னர். சிலர் மசூதியின் மேலேறி கோபுரங்களை உடைத்தனர். 12.20 மணியளவில்  ஏறத்தாழ 25,000 கரசேவர்கள் வளாகத்தினுள் கூடினர். 2.40 மணியளவில் 75,000 பேர் மசூதியை சூழ்ந்து கொண்டு இடித்தனர்.  இப்போது  பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தனது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் என பின்னர் தெரிய வந்தது. அத்வானி, முரளி  மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா  (வி.ஹெ.ச்.பி) பஜ்ரங்தலை சேர்ந்த வினய் கதியார் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

டிசம்பர் 8-ஆம் தேதி அன்று அத்வானி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இது நாட்டுக் காக இந்து மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம்  என்றும், இதில் அரசாங்கம் தலையிட்டு தொண்டர்களை கைது செய்தது அடக்குமுறையே என்றும், இது அமைப்பை பலப்படுத்துமே  அன்றி அதை அழிக்க இயலாது என்றும் குறிப்பிட்ட அவர், பாபர் மசூதி இடிப்பு  அயோத்தி இயக்கத்தின் ஒரு பகுதியே என்று ஆவேசமாக  குறிப்பிட்டார்.

இதற்கிடையில் உச்சநீதிமன்றம் அக்டோபர் 24, 1994-ஆம் ஆண்டு தனது தீர்ப்பில்  பிரச்சினைக்குரிய 67 ஏக்கர் நிலத்தில் ஒரு பொதுவான  அமைப்பை அரசாங்கம் ஏற் படுத்தி பிரச்சினைகளுக்க தீர்வு காணலாம் என்றும், பிரச்சினை ஏற்படாதவாறு மக்களை வழிபட அனுமதிக்கலாம் என்று கூறி இருந்தது. மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு முஸ்லீம்கள் குறைந்த அளவே தொழுகை நடத்தி வந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருப்பினும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகே பிரச்சினைக்குரிய இடத்தில்  முஸ்லீம்கள் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் வழி படலாமா என்பது தெரியவரும்.

1950-ஜனவரி 16-ம் தேதி கோபால் சிங் விஷார்ட் என்பவர் கோயிலில் வழிபட அனுமதி வேண்டி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  நீதிபதி சிலைகளை அப்புறப் படுத்த உத்தரவிட்டு வழிபாட்டுக்கு அனுமதி மறுத்தார். இதை எதிர்த்து 1950-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி  உத்திரபிரதேச அரசு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்து வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா கூறும்போது ""1951-1986  வரை பைசாபாத்தில் நிலைமை அமைதியாகவே இருந்தது. 1936-1950 வரை பதட்டமான சூழ்நிலை நிலவியது. 1951- 1986 வரை எந்த  ஒரு கலவரமும் இல்லாமல் அமைதி காணப்பட்டது.

WIKILEAKS-விக்கிலீக்ஸ் பக்கங்களை புரட்டுவோம்



விக்கிலீக்ஸ்  (Wikileaks) அல்லது விக்கி கசிவுகள் என்பது இன்று உலகமே பரபரப்பாக பேசப்படும் இணையத்தளம். ஒரு இலாப நோக்கற்ற  இணைய ஊடகம். இதில் விக்கி என்பது யார் வேண்டுமானலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத் தளங்களை குறிக்க  பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபீடியாவின் விக்கி வடிவம்தான் விக்கிப்பிடியா (wikipedia.com). இதுபோல விக்கிலீக்ஸ் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின்  பாதுகாக்கப் பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு  கொண்டு வருகின்றது. நிறுவிய  ஓராண்டுகளுக் குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் இந்த இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமாக  ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் படை செய்த படுகொலைகளை பகிரங்கப்படுத்தியுள்ளது. இராணுவம் செய்த கொடூரங்களை  ஒளிப்படங்களாக வெளியிட்டது. அமெரிக்க இராணுவ இரகசிய ஆவணங்களை வெளியிட்டு திகிலூட்டியது. இவ்வளவுக்கும் காரணமான விக்கிலீக்ஸ் இணையத்தை இயக்குபவர்கள் சில பேர் கொண்ட குழுதான். அதன் மூளை வர்ணிக்கப்படுபவர் விக்கி லீக்ஸின் ஆசிரியர் ஜூலியன் பவுல் அசாஞ்ச். இணையத்தளத்தை நிறுவியவர். அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். இவரின் தன்னலமற்ற மனித  உரிமை ஆர்வம்தான் விக்கிலீக்ஸ் உருவாக காரணம்.


ஜூலியன் பவுல் அசாஞ்ச்  (Julian Paul Assange)  ஓர் ஆஸ்திரேலியர். இந்த துடிப்பான இளைஞருக்கு 41 வயது. திருமணமாகி  விவாகரத்தானவர். தனது 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை  தன் வசப்படுத்தி, அதனுள் புகுந்து அனைத்தையும் படித்த ஹேக்கிங் கில்லாடி.


ஹேக்கிங் என்பது ஒருவரின் வலைதளத்தின் உள்அமைப்புக்குள் திருட்டுத்தனமாக சென்று அவற்றில் வைக்கப்பட்டுள்ள தகவல்களை திருடுவது. மாட்டிக்கொண்டால் சிறைதண்டனை  நிச்சயம். இதில் ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் நிபுணத் துவம் பெற்றவர் ஜூலியன். வலையமைப்பின் பாதுகாப்பு  வலையங்களை உடைத்து உட்புகுந்து கணினிகளுக் கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காமல்,  தகவல்களை திருடுவதில் கரைக்கண்டவர். இது ஒரு பாதுகாப்பான திருட்டுத் தனம். இந்த வழியில் பல  பொது நிறுவனங்கள்,  அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் தகவல் களை எடுத்துவந்தார். அப்படி செய்துவந்த வேளையில் இந்த சமூகம் எப்படி ஒரு  போலியான கட்டமைப்புக் குள் இருந்து கொண்டு அப்பாவி மக்களை அலைக் கழிக்கிறது என்பதனைக் புரிந்துக் கொண்டார். ஊடக  போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன்  அதற்குக் கொடுத்த செயல் வடிவம்தான் "விக்கிலீக்ஸ்'.



அரசின் இரகசியங்களை பகிரங்கமாக மக்களிடம் எடுத்துவைப்பது என  முடிவு செய்து விக்கிலீக்ஸ் தளத்தினை ஆரம்பித்தார் ஜூலியன். இதற்காக wikileaks.org எனற இணையத்தள முகவரி 2006-ஆம் ஆண்டு  அக்டோபர் 4-ஆம் தேதி ஜூலியனின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பல ஐரோப்பிய  நாடுகளில் ஏற்படுத்தப்பட்டது.


ஏன் ஐரோப்பிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் இந்த நாடுகள் அனைத்தும் தகவல் பரவல்  சட்டப்படி பாதுகாப்பு வழங்கும் நாடுகள். எந்த நாடா வது விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கினால், வேறொரு நாட்டில் இருந்து தளம்  தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. அதேபோல வெளி யிடப்படும் இரகசியத் தகவல்களை எந்த நேரத்திலும் எந்த  நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் நீக்குவதில்லை என்பது விக்கிலீக்ஸ் கொள்கை.  இப்படி சிறப்பாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது  விக்கிலீக்ஸ். இது இந்த நூற்றாண்டின் இணைய ஊடகத்தின் மாபெரும் புரட்சி என்றே சொல்லலாம்.


உலகமெங்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கான பதிவு செய்யப் பட்ட தன்னார்வ தொண்டர்கள் மட்டும் 1200 பேர். இது 2009-ஆம் ஆண்டு  விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல். இவர் களை வழிநடத்துவது விக்கிலீக்ஸ் ஆலோசனைக் குழு. அதில் ஜூலியன் அசாஞ்ச் (ஆலோசனைக்  குழுவின் தலைவர்), பிலிப் ஆதம்ஸ், சி.ஜே.ஹின்க், பென் லூரி, டேசி  நெம்கியால் கம்ஷிட்சாங், சூவா கியுவங், சிகோ விட்கேர், வாங்  யுக்காய் ஆகியோர் உள்ளனர். மொத்தமே இவ்வளவு பேர்தான் விக்கிலீக்ஸின் பணியாளர்கள். இவர்களின் பணி கோப்புகளை சரிபார்ப்பது, மொழிபெயர்க்க வேண்டியிருந்ததால் மொழி பெயர்ப்பது, அதன் பின்னர் கோப்புகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பது. அவ்வாறு  பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. இவரே  முதன்மை ஆசிரியர். இவர்களின் சீரிய பணியிலிருந்துதான் விக்கிலீக்ஸ் செயல்படுகிறது.

அடுத்ததாக, உங்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் வரலாம். சாதாரணமாக யாருக்கேனும் ஈமெயில் வழியே மிரட்டல் விடுத் தாலே அவர்கள்  பயன்படுத்திய ஐ.பி (Internet Protocol address - IP address)  முகவரியை கண்டுபித்து ஈமெயில் அனுப்பியவரை பிடித்துவிடுவார்கள். அப்படி இருக்க ஒரு நாட்டின்  இரகசியத்தையே எப்படி விக்கிலீக்ஸிற்கு அனுப்பிவைக் கின்றனர். அவர்கள் மாட்டிகொள்ள மாட்டார்களா என கேள்வி எழுவது  நியாயமானதே. இந்த மாபெரும் பிரச்சினையிலிருந்து தப்பிக்க விக்கிலீக்ஸ் தனது ஆர்வலர்களுக்கு பரிந்துரை செய் திருப்பது பர்ழ். இது ஒரு  இணையத்தொடர்பு வழங்கி. www.torproject.orgஇல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Tor anonymity network என குறிப்பிடப்படுகிறது. இதன்  இலச்சினையே வெங்காயம்  தான். வெங்காயம்  உரிக்க,  உரிக்க இதழ்கள்தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த  டார். திருட்டுதனமாக இதன் மூலம் எதையும் அனுப்பலாம். இதனுள் போனால் நீங்கள் எங்கிருந்து என்ன தகவல்களை அனுப்புகிறீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இப்படி எல்லா விதத்திலும் தயார்படுத்திக் கொண்டு ஊடக யுத்ததிற்கு தயாரானார்கள் விக்கிலீக்ஸ் குழுவினர்.

விக்கிலீக்ஸ் 2010 ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு வீடியோவை Collateral  Murder என்ற பெயரில் வெளியிட்டது. அவ்வளவுதான் ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது.  அப்படி என்ன இருந்தது அந்த வீடியோவில்?. எந்தவித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்ச ரிக்கைக்காக என்ற  காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும்  கட்டிடத்தினை  வேட்டையாடப் படுவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அதில் இறந்தவர் களில் புகழ்பெற்ற  ""வாஷிங்டன் போஸ்ட்'' செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை  கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்ததும், அந்த வீடியோ  தாக்குதலில் ஈடுபட்ட அதே  ராக்கெட்டிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யமான விஷயம்.


அமெரிக்காவின் மனித உரிமை,  சர்வதேசப் போர் விதி முறை சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வ ளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான  இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது. உலக அளவில் மனித நேய ஆர்வலர் ஜூலியன் பவுல் அசாஞ்ச்-ஐ  கொண்டாடியது. ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. நியூ மீடியா விருது, இங்கி லாந்து மீடியா விருது போன்றவை அவற்றில்  முக்கியமானவை.


2010-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 25-ஆம் தேதி விக்கி லீக்ஸ் 1.2 மில்லியன் அமெரிக்க இராணுவ கோப்புகளை கைப் பற்றியது. இவற்றை அலசிபார்த்து ஆயிரம்  கோப்புகளை மட்டும் ஒழுங்குபடுத்தியது. அதனை ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் (Afghan War Diary) என்ற  தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், ஜெர்மனியின் டெர்  ஷெபிகல், பிரான்சின் லி மொன்ட், ஆஸ்திரேலியாவின் தி ஆஸ்திரேலியன், இங்கிலாந்தின் த கார்டியன் போன்ற முக்கியப்  பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வளவுதான் மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. விக்கிலீக்ஸ் தளத்தின் ஆரம்ப கால  அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்து விட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் ""நேர்மையற்ற'' போர் தந்திரங்கள், படுகொலைகள்  அம்பலமானது. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப்  (Nato)  படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே  சுட்டுக்கொன்ற தும் இதில் அடக்கம். வட அமெரிக்காவில் அரசியல் உஷ்ணம் அதிகமானது. நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்ட நிலைமை அமெரிக் காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்க  ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக் கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர் கொண்டதில்லை. ""இது நாட்டின் பாதுகாப்பு மற்றும்  இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை' இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது', இல்லை இல்லை அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருந்திவிட்டோம், இல்லை இல்லை 'அந்த கனடா வீரர்களை  நாங்கள் கொல்லவில்லை,'' என அமெரிக்கா உளறிக்கொட்டியது. அப்படி உளறினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத்  தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது.


2010 நவம்பர் மாதம் 28- ஆம் தேதி அமெரிக்காவின் முகமூடி கழற்றப்பட்ட நாள்.  அமெரிக்க தூதரக இரகசியம் (Cablegate) பெயரில் 2,50,000 கோப்புகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ். அமெரிக்க தூதரகங்களின் ஆவணங்கள் இணைய வரலாற்றில் முதல் முறையாக அம்பலப்படுத்தப்பட்டது. இதனால் அமெரிக்க  வெள்ளைமாளிகையின் அடித்தளமே ஆட்டம் கண்டது. “அமெரிக்காவின் பாதுகாப்புக் கெதிரான அச்சுறுத்தல், உலக நாடுகளில்  ஒற்றுமையின் மீதானத் தாக்குதல்’’ என்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன். ஒவ்வொரு நாட்டுத்  தலைவர்களையும் தொலைபேசியில் அமெரிக்கா அழைத்து "அதெல்லாம் பொய்.. ஏமாத்துறான்..நம்பாதீங்க' என்றெல்லாம் கெஞ்சியது.  வரலாற்றில் முதல் முறையாக  அமெரிக்கா சகநாடுகளிடம் சிரம் தாழ்ந்து, பணிந்து பேச வைத்தார். ஜூலியன். விக்கிலீக்ஸ்  வெளியிட்ட இரகசிய ஆவணங்களைப் படித்த பிறகு, இப்போது, ஒவ்வொரு நாட்டுக்கும் தனது தூதர்களை அனுப்பி, விக்கிலீக்ஸ்’  சொல்வதை தயவு செய்து நம்பிவிடாதீர்கள்’ என்று கோரிக்கை விடுத்துவருகிறது அமெரிக்கா. அப்படி என்ன இருக்கிறது அமெரிக்க  தூதரக இரகசியத்தில். முதலில் நமது நாட்டை மட்டும் பார்ப்போம்.


இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில்  உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவுடன் பரிமாறப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்கத்  தூதர் திமோதி ரோமரிடம் பேசும்போது, வளர்ந்து வரும் தீவிரவாதப் போக்குக் கொண்ட இந்துக் குழுக்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு  அதிக அச்சுறுத்தல்கள் உள்ளதென, தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. சிவசேனைக்கு எதிரான ராகுல்  காந்தியின் கடுமையான அணுகுமுறை குறித்தும் இன்னொரு கசிவில் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், ராகுல் காந்தியின்  கருத்துக்கு  ஆர்எஸ்எஸ், விசுவஹிந்து பரிஷத் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருந்தபோதும் ராகுல் காந்தியின் கருத்துகள் சரியானதே என மதசார்பற்றவர்கள் கூறுகின்றனர்.


அதேபோல ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அது தொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை  இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்  கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.  .


 இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள்  உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹிலாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர்  ஒதுக்கியுள்ளார். இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாது காப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹிலாரி.


இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய  யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா. மேலும் அணி சேரா  நாடுகள் கூட்டமைப்பு, ஜி-77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது. .


விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி  வகுத்திருக்கிறது.


இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் "விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி  கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு  தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார். அமெரிக்காவின் இந்த இராஜத்தந்திரம் இனி எடுபடுமா? என்பது சந்தேகம்தான்.


ஒவ்வொரு வெளியீட்டிற்குப் பிறகும் ""இதெல்லாம் எப்படி உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது'' என ஜூலியனிடம் கேட்கும் போதெல்லாம், ""அது  ராமசாமி கொடுத்தது.... இது கந்தசாமி கொடுத்தது...'' என்பது வழக்கம். ஜூலியனை நன்கு அறிந்தவர்கள் யாரும் அதனை நம்புவதற்குத்  தயாரில்லை. ஜூலியன் தனது ஹேக்கிங் நடவடிக்கைகள் மூலமே இதையெல்லாம் வெளியில் கொண்டுவருகின்றார். அதனிலிருந்து சட்ட  ரீதியாகத் தன்னைப் பாதுகாக்க "விக்கி' எனும் இணைய நெட்ஒர்க் அமைப்பினைக் கேடயமாக்குகிறார். அதே நேரத்தில் ஜூலியன் இரு பெண்கள் விஷயத்தில் மாட்டிக் கொண்டது என்பது என்னவோ  உண்மைதான். இதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு, தற்சமயம் ஜாமீனில் வெளிவந்துள்ளார். தமது பக்கம் நியாயம்  இருப்பதால்தான் பிணையில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜூலியன், நீதிக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்தார். ""அமெரிக்க என்னை இன்னும் பின் தொடர்ந்தால் அமெரிக்காவில் திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளின் ரகசியங்களை  வெளியிடுவேன். அதேபோல அந்த வங்கிகளின் கணக்கு விவரங்கள் பகிரங்கப்படுத்தப் படும்'' என மிரட்டல் விடுத்தார். எது எப்படியோ இன்று உலகளவில்  பிடல் காஸ்ட்ரோ, குகே சாவேஸ், நோம் சோம்சுக்கி ரஷ்ய-சீன பொதுவுடமை தலைவர்கள்  விக்கிலீக்ஸை ஆதரிக்கிறார்கள்.  சமூக ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விக்கிலீக்ஸுக்கு பெரும் ஆதரவை தந்துவருகின்றனர். இந்த பரபரப்பில் ரஷ்யா ஜூலியனுக்கு நோபல் பரிசு  தர வேண்டும் என கூறியுள்ளது. அவரது தாய்நாடான ஆஸ்திரேலியாவே ஜூலியன் எங்கள் மண்ணின் மைந்தன் அவரை நாங்கள் பாதுகாப்போம் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் விக்கிலீக்ஸ் சீனாவுக்கு ஆதரவானது எனவும் கருதப்படுகிறது. எது எப்படி இருந்தாலும்  எவ்வித சமரசமுமின்றி பணம் பதவிக்கு ஆசைப்படாமல் நேர்மையான துணிவான ஜூலியன் பவுல் அசாஞ்ச்-ன் சாதனை ஈடு  இணையில்லாத ஒரு மாபெரும் ஊடக சாதனை இந்த நேர்மையான பத்திரிகையாளரின் வெற்றிப் பயணம் தொடரட்டும். மக்கள் விரோத அரசுகளின் இரகசியம் அம்பலமாகட்டும்.

Source: நக்கீரன்

Tuesday, March 1, 2011

விஜய் நம்பியார் ஒரு போர்க் குற்றவாளி?!

2009, மே 18-ம் தேதி, வெள்ளைக் கொடி ஏந்தி சரண​டைய வந்த
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது சிங்கள ராணுவம்.விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்​டோர் ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் தொடர்பு​கொண்டு பேசியபோது, அவர்களுடைய பாது​காப்புக்கு உறுதி அளித்திருக்கிறார். விஜய் நம்பியாரின் உறுதி​மொழியை நம்பி வந்த தலைவர்கள் அனைவரும் கூண்டோடு சுட்டுக் கொல்​லப்பட்டு இருக்​கிறார்கள் என்றும் உறுதியாக நம்பப்படுவதாக இன்னர் சிடி பிரஸ் என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அல் ஜசீரா என்ற அரபுத் தொலைக்​காட்சிக்கு விஜய் நம்பியார் அளித்த பேட்டியில், ''மகிந்தா ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற சிங்கள மருத்துவர் பலித கோஹனே ஆகியோர், சரணடைய வரும் புலிகள் அனைவரும் போர்க் கைதிகளுக்கு உரிய மரியாதையோடு நடத்தப்படுவார்கள் என்று உறுதியளித்த​னர்!'' என்று கூறியிருக்கிறார்.
மேலும் அதே பேட்டியில், இலங்கை அரசைத் தொடர்புகொண்டு புலிகளின் உயிருக்கு அரசு அளித்த உத்தரவாதத்தை உறுதி செய்துகொண்ட​தாகவும் தெரிவித்து உள்ளார். இத்தனை உறுதிமொழிகளுக்குப் பின்னரும் எப்படி இப்படி ஒரு படுகொலை நடந்தது என்ற வினாவுக்கு, ''தலைவர்கள் இலங்கை ராணுவத்​திடம் சரணடைவதை விரும்பாத விடுதலைப் புலிகள் ராணுவத்துடன் போரிட்டிருக்கலாம். அப்போது நடந்த சண்டையில் சரணடைய வந்த புலித் தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கலாம்...'' என்று நம்பியார் கூறியுள்ளார். ''இது உங்கள் அனுமானம்தானே... நடந்த உண்மை என்ன?'' என்ற கேள்விக்கு விஜய் நம்பியார் தெளிவான பதில் கொடுக்காமல் மழுப்பிவிட்டார்.
இவர்தான் நம்பியார்!
கேரள நம்பியார், தமிழர்களுக்கு மட்டும் வில்லனாக விளங்கவில்லை. உரிமை கேட்டுப் போராடுகிற அனைத்து மக்களுக்கும் எதிரியாகவே செயல்படுகிறார். விஜய் நம்பியாரை டிசம்பர் 2010-ல் பர்மாவுக்கான சிறப்புத் தூதராக பான் கி மூன் நியமித்தார். இதை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள பர்மா மக்கள் குழுவினர், ''நம்பியார், பர்மா அரசாங்கத்துடன் இணைந்து ராஜபக்ஷேவுடன் நடத்திய இனப் படுகொலையை அரங்கேற்றிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே அவரை மாற்ற வேண்டும்...'' என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த குழுவினர் சார்பாக மார்க் ஃபார்மனர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஐ.நா-வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லையல் கிராண்ட், ''பர்மாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் பதவியில் இருந்து நம்பியாரை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்!'' என்று ஆதரவுக் குரல் எழுப்பி இருக்கிறார்.
Source: Vikatan